கடல் தங்கம் என்று வர்ணிக்கப்படும் 350 அபூர்வ மீன்களைப் பிடித்து குஜராத் மீனவரொருவர் கோடீஸ்வரராக மாறியுள்ளார். இது பற்றி தெரிய வருவதாவது,
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் ஜக்கா டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஹசன் இசா பயா (மீனவர்) இவர் தனது படகில் 15 மீனவர்களை அழைத்துக் கொண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றார்.
ஹசன் கடலுக்குள் விரித்த வலையில் ஒரே சமயத்தில் 350க்கு மேற்பட்ட கோல் என்ற விலை உயர்ந்த மீன்கள் சிக்கின. இந்த கோல் ( Ghol )வகை மீனானது 'கடல் தங்கம்' என்று வர்ணிக்கப்படுகிறது.
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கோல் ( Ghol )வகை மீன்களில் இருந்து விலை உயர்ந்த மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இம்மீன்கள் அவ்வளவு எளிதில் கிடைக்காது என்பதால் சர்வதேச சந்தையில் ரூபா 30 ஆயிரம் முதல் ரூபா 50 ஆயிரம் ரூபா வரை விற்கப்படுகிறது.
ஹசன் பிடித்து வந்த இந்த மீன்கள் ரூபா 1 கோடிக்கு மேல் விற்கப்பட்டன. அவரிடம் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.
இது பற்றி மீனவர் ஹசன் கூறும்போது, இதற்கு முன்பு நான் எத்தனையோ தடவை கடலுக்கு சென்று வந்துள்ளேன். எவ்வளவு மீன்கள் பிடித்து வந்தாலும் ரூபா 5 இலட்சத்திற்கு மேல் சம்பாதித்ததில்லை. ஆனால் இந்தத் தடவை ஒரே சமயத்தில் 350 கோல் வகை மீன்கள் வலையில் சிக்கின. இந்த மீன்களை பார்த்ததும் நாங்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தோம்.
அதைப் பத்திரமாக கரைக்குக் கொண்டு வந்தோம். என்னிடம் கோல் வகை மீன்கள் இருப்பதை அறிந்ததும் ஏராளமான வியாபாரிகள் அதை வாங்க போட்டி போட்டனர்.
சில நிமிடங்களிலேயே அத்தனை மீன்களும் விற்றுத் தீர்ந்தன. எனது உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் என்னை இப்போது 'கோடீஸ்வரன்' என்றே அழைக்கிறார்கள்.
நான் இதுவரை அதிர்ஷ்டத்தை நம்பவில்லை. ஆனால் இப்போது அதை நம்புகிறேன். அதிர்ஷ்டம் இருந்ததால்தான் எனது வலையில் 350 கோல் வகை மீன்கள் சிக்கின. இந்த வகை மீன் என் வலையில் சிக்கியதே இல்லை என்றார். ஹசன் பிடித்து வந்த கோல் வகை மீன்களை மற்ற மீனவர்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக