வெடிகுண்டு விபத்தில் பார்வையிழந்த ஈராக்கைச் சேர்ந்த பெண்மணிக்கு, நவீன மருத்துவ தொழில்நுட்பம் மூலம், 18 ஆண்டுகளுக்குப் பின், பார்வை கிடைத்துள்ளது. ஈராக்கின், சுலைமானியா பகுதியைச் சேர்ந்த பெண்மணி குலா நமிக் ஹாசன், 40. இவர், 18 ஆண்டுகளுக்கு முன், சாலையில் நடந்து சென்றபோது, வெடிகுண்டு விபத்தில் சிக்கினார். அதில், அவருடைய வலது கண் முற்றிலும் பறிபோனது. மோசமாக சேதமடைந்த இடது கண்ணில் செயற்கை கண் பொருத்த மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்தது. கடந்த 18 ஆண்டுகளாக, பார்வையின்றி தவித்துவந்த குலா நமிக் ஹாசனுக்கு, சென்னை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மூலம், தற்போது பார்வை கிடைத்துள்ளது.
இதுகுறித்து, டாக்டர் அமர் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது: குலா நமிக் ஹாசனின் வலது கண்ணை எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இடது கண்ணில் லென்ஸ் பொருத்தும் இடமும் (கண் பாவை) வெண்மையாக மாறியிருந்தது. இதனால், ஒளி கண்ணுக்குள் செல்ல முடியாமல் இருந்தது. இதைச் சரிசெய்து, "பைப்பரின்' பசை எனும் தொழில்நுட்பம் மூலம், செயற்கை லென்ஸ் (எடூதஞுஞீ ஐOஃ) பொருத்தப்பட்டது. கடந்த மாதம் 25ம் தேதி செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சைக்குப் பின், இவரால் தற்போது படிக்கவும், வண்ணங்களை பார்க்கவும் முடிகிறது. இவ்வாறு அமர் அகர்வால் கூறினார். கண் மருத்துவ நிபுணர் கீதா சிவராஜ், குலா நமிக் ஹாசனின் உறவினர் மக்முத் ஆகியோர் உடனிருந்தனர்.
குலா நமிக் ஹாசன் கூறும்போது, ""18 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் பார்வை பெற்றதற்காக, கடவுளுக்கும், டாக்டர் அமர் அகர்வாலுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். குலா நமிக் ஹாசனின் கணவர் உஸ்மான். இவர்களுக்கு, முகமது, 7 என்ற மகனும், ரியான் 4 எனும் மகளும் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக