சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், பிற்பகல் 12.45 மணியளவில் ஆரம்பமான பதவியேற்பு விழாவில், ஜெயலலிதாவுக்கு ஆளுனர் பர்னாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இதன் போது முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா தனது உறுதிமொழியில் இவ்வாறு தெரிவித்தார் :ஜே.ஜெயலலிதா எனும் நான் சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறா பற்றையும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும் ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அமைச்சின் முதலமைச்சராக உண்மையாகவும், உளச்சான்றின் படியும் எனது கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்புக்கும், சட்டத்திற்கும் இணங்க அச்சமும், ஒரு தலை சார்பு இன்றி, விருப்பு, வெறுப்பை விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானவற்றை செய்வேன் என்றும், ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகின்றேன் என்றார்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ற முறையில், எனது கவனத்திற்கு உள்ளாவதும், தெரியவருவதுமான எந்த பொருளையும், முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவு கண்டு, ஒருவரிடமோ, பலரிடமோ நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகின்றேன் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக