ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 அரையாண்டு தேர்வு தமிழ் முதல் வினாத்தாளில் நபிகள் என்பதற்கு பதிலாக நரிகள் என இருந்ததால், பெரியபட்டினத்தில் முஸ்லிம் அமைப்பு மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில் 18வது கேள்வியில் "அபூபக்கருடைய அன்பின் ஆற்றலும், நரிகள் நஞ்சு தீர்த்து அருளியதும்' என்ற கேள்வி இடம் பெற்றது. இதில் நபிகள் என்பதற்கு பதிலாக நரிகள் என பிழையாக இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பெரியபட்டினம் பி.எப்.ஐ., நகர் தலைவர் முகம்மது சலீம், மாவட்ட செயலாளர் அசன் அலி, எஸ்.டி.பி.ஐ.,தொகுதி தலைவர் பைரோஸ் கான் மற்றும் ஏராளமானோர் அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர்.
அங்கு தலைமை ஆசிரியர் இல்லாததால் தமிழாசிரியர் முருகனிடம் நடவடிக்கை கோரி மனு அளித்தனர். எஸ்.டி.பி.ஐ., தொகுதி செயலாளர் பைரோஸ் கான் கூறியதாவது:முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், வரலாற்று சம்பவங்களை திரித்துக் கூறும் விதமாகவும் கேள்வி அமைந்துள்ளது. துறை ரீதியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். முதன்மை கல்வி அலுவலம் செல்லம் கூறியதாவது: அச்சுப்பிழையால் இந்த தவறு நேர்ந்தது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கூறி தவறை சரி செய்ய கூறியிருந்தோம். இதை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக