தமிழகத்தில் இப்படியான உணவகங்களில் உணவு உண்பது பெரிய கௌரவமான விஷயமாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால் வேறு பல நாடுகளில் இவைகூட உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒரு அம்சமாக விளம்பரப் படுத்தப்படுகின்றன.
முக்கியமாக மலேசியா மற்றும் தாய்லாந்தில் இவை மிகப் பிரபலம். சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள்கூட சர்வசாதாரணமாக வீதியோரத்தில் காரை நிறுத்திவிட்டு இங்கு உணவு உண்பதைக் காணலாம்.
போர்வீரர்கள் படையெடுப்புப்போல உணவு வண்டிகள்
சுடச்சுடத் தயாராகும் உணவுவை உடனே சுவைக்கலாம் (நாக்கு ஜாக்கிரதை)
தாய்லாந்தில் தலைநகர் பாங்காக்கில், ஏறத்தாழ 43 ஆயிரம் தெருவோர உணவுக் கடைகள் இருப்பதாக நகராட்சி நிர்வாகம் கணித்திருக்கிறது.
நகரத்தின் அனைத்து முனைகளிலும், போர்வீரர்கள் படையெடுத்துச் செல்வது போன்று, பாங்காக்கில் எங்கு பார்த்தாலும் சிறிய உணவு வண்டிகள் சுடச்சுட உணவு விற்பதைக் காணலாம்.
இதுபோன்ற தெருவோர உணவகம் நடத்துபவர்களில் ஒருவர்தான் சோம்போங் சீதா. இவரது தெருவோர உணவகத்தில் ஸ்பெஷாலிட்டி சிக்கன் ரைஸ்! இதை உண்பதற்காக இவரது உணவகத்தைத் தேடிவரும் வாடிக்கையாளர்களே அதிகம்.
சோம்போங் சீதா 8 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலில் இருக்கிறார். வானத்தில் சூரியன் எட்டிப்பார்ப்பதற்கு முன்பாக அதிகாலையில் எழுந்துவிடுகிறார். பின்னர், தனது புகழ்மிக்க தயாரிப்பான சிக்கன் ரைஸ் தயாரிப்பதற்கான வேலைகளில் மும்முரமாகி விடுகிறார்.
வெளியேயிருந்து வந்துசேர்ந்த உணவு இது!
பாங்காக்கின் பல பகுதிகளிலும் பிரபலமாக விற்பனையாகும் இந்த சிக்கன் ரைஸ் உண்மையில் ஒரு தாய்லாந்தின் பாரம்பரிய உணவல்ல. சீனாவில் உள்ள ஹாய்னன் தீவின் பாரம்பரிய புகழ்பெற்ற உணவு வகைதான் இது. தற்போது தாய்லாந்தில் மிகப் பிரபலமாகி கிட்டத்தட்ட உள்நாட்டு உணவு போலாகிவிட்டது.
சிக்கன் ரைஸ், நன்கு வேகவைக்கப்பட்ட கோழி இறைச்சியுடன் வாசனைப் பொருட்கள், இஞ்சி கலந்த சாஸ் மற்றும் அரிசி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இத்துடன் சிறிய கிண்ணத்தில் ரசம் போன்ற திரவம் ஒன்றும் அளிக்கப்படுகிறது. அதை முதலில் குடித்துவிட்டு சிக்கன் ரைஸை உண்ணலாம். சூப் மாதிரி இருக்கும்.
தாய்லாந்து உணவு வகைகளை, ருசி பார்க்க சரியான இடம் எதுவென்று கேட்டால் தெருவோர உணவகங்கள்தான் என்கிறார்கள் அங்கு வசிப்பவர்கள். பாங்காங்கில் பசியுடன் வரும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதில் இந்த உணவகங்களுக்கிடையே போட்டா போட்டி நிலவுகிறது. 10 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாங்காக் மக்களின் பசியை போக்குவதில், இதுபோன்ற தெருவோர உணவகங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தாய்லாந்தின் தென்கிழக்கே உள்ள சிறிய கிராமம் ஒன்றில் நெல் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த சோம் போங்கிற்கு (வயது 38) விவசாயம் மூலம் கிடைத்த வருமானம் போதுமானதாக இல்லை. இதனால், வளமான வாழ்வைத்தேடி பாங்காக் நகருக்கு குடி பெயர்ந்துள்ள இவர், மத்திய பாங்காக்கில் உள்ள கான்கிரீட் நடைபாதையைதான் தனது வருமானத்துக்கான மையமாக வைத்திருக்கிறார்.
சாப்பாடு போட்டாலும் சங்கடங்கள்
பாங்காக் நகரம், தெருவோர உணவு வியாபாரிகளை விரும்பும் அதே நேரத்தில், ஒரு சில காரணங்களுக்காக வெறுக்கவும் செய்கிறது. நகரின் ஒரு சில பகுதிகளில் தெருவோர உணவுக் கடைகளை நடத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது. தெருவோர உணவகங்கள் நடத்துபவர்கள், சாலை ஓரங்கள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், உணவுப் பொருட்கள் சிந்தப்படுவதால் இடமும் அசுத்தமாகின்றது என்பதே தடைக்குக் கூறப்படும் காரணம்.
பாங்காக் கில் வெளியாகும் ஆங்கில நாளிதழான ‘தி நேஷன்’ அண்மையில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், தெருவோர வியாபாரிகளை ‘ஒட்டுண்ணி சமூகவிரோதிகள்’ என்று வர்ணித்துள்ளது. நகரில் நடைபெறும் பெரும்பாலான சிறு குற்றங்களில் ஈடுபடும் பிச்சைக்காரர்கள், தெருவோர ரௌடிகள் போன்றோர், பல்கிப்பெருக இந்த தெருவோர உணவகங்கள் காரணமாக இருக்கின்றன என்று கூறுகிறது அந்த கட்டுரை.
ஆனால், தெருவோர வியாபாரிகள் இல்லாத பாங்காக்கை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
சோம்போங்கின் தெருவோர உணவு கடையை நாடி வரும் வாடிக்கையாளர்களைப் பார்த்தாலே இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவரும். பள்ளியில் உள்ள கேன்டீனை நோக்கி குழந்தைகள் பசியுடன் வருவதை போன்று சோம்போங்கின் கடையை, வாடிக்கையாளர்கள் மொய்க்கின்றனர்.
ஃபாஸ்ட் ஃபூட் நங்கைகளைவிட இங்கே ஜிலுஜிலு!
சோம்போங்கின் கடை, துரித உணவகமாக செயல்படா விட்டாலும்கூட, அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவாக உணவு வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக அவர்களுடன் கலகலவென கலந்துரையாடும் சோம்போங், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஃபாஸ்ட் ஃபூட் உணவகங்களில் உணவு பரிமாறும் இளம் பெண்களைவிட, வாடிக்கையாளர்களை தனது பேச்சாலேயே, குளிரவைத்து விடுகிறார்.
வாடிக்கையாளர்கள் வழக்கமாக எதை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதை தெரிந்து வைத்துள்ள சோம்போங், அவர்கள் கடைக்கு வந்த உடனேயே அவர்கள் வழமையாக உண்ணும் இறைச்சி வகையையை எடுத்து பரிமாறி விடுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக