அப்போது திடீரென ஒரு பஸ், ரயில்வே கிராசிங்கில் குறுக்கிட்டது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பைலட், உடனடியாக பிரேக் போட்டு ரயிலை நிறுத்த முயன்றார். ரயில் வேகமாக வந்ததால் உடனடியாக நிறுத்த முடியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ் மீது ரயில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் சிறிது தூரம் பஸ்சை இழுத்துச் சென்று நின்றது. பஸ்சில் இருந்த 33 பேர் உடல் சிதறி அந்த இடத்திலேயே பலியாயினர். 30 பேர் தண்டவாளத்தின் இருபுறமும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். பயணிகளின் மரண ஓலத்தால் அந்த இடமே மயானம் போல காட்சி அளித்தது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. மீட்புக் குழுவினரும் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பயணிகளை மீட்டு கன்சிராம் நகர் மற்றும் எடா மாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பஸ்சில் சுமார் 80 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது.
இவர்கள் அனைவரும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரிந்தது. பலியானவர்கள், காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்களை ரயில்வே அதிகாரிகளும் போலீசாரும் சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே இணையமைச்சர் முனியப்பா, ரயில்வே வாரிய தலைவர் வினய் மிட்டல் ஆகியோர் விரைந்துள்ளனர். ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.
இந்த கொடூர விபத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில் விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக