ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

لسلام عليكم و رحمة الله و بركاته

நஹ்மதுஹூ வநுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்.

முன்னுரை


“என்னைக் குறித்து அறிவியுங்கள். அது சிறியதோர் செய்தியாயினுஞ்சரியே”. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ.

அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இத்திரு மொழியின்படி, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி நான் படித்தறிந்த விஷயங்களைத் தொகுத்து ஒரு சிறிய புத்தகத்தை எழுத நாட்டம் கொண்டேன். அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா இப் புத்தகத்தை எழுதுவதற்கான ஹிதாயத்தையும், அறிவையும், ஆற்றலையும் கொடுத்தான். அதனைக் கொண்டு இச்சிறிய புத்தகத்தை எழுதியுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய உம்மத்துகள் மீது நீங்காத பற்றும் பாசமும், கவலையும் கொண்டவர்களாக இருந்தார்கள். “இறைவனே! என் சமுகத்தார், என் சமுகத்தார்” எனக் கூறி அழுதவர்களாக இருந்தார்கள். இம்மையிலும், மறுமையிலும் அவர்களின் வாட்டம் போக்க நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

ஆனால், உம்மத்துகளில் ஒரு கூட்டத்தார் அன்னாரை கண்ணியப்படுத்துவதில் குற்றம் காண்கிறார்கள்! அன்னார் மீது ஸலவாத்து ஓதுவதில் குற்றம் காண்கிறார்கள்! அன்னாரின் நேரிய வழிமுறைகளில் குற்றம் காண்கிறார்கள்!

மனிதர்கள்தான் இவ்விதம் குற்றம் காணக்கூடியவர்களாக இருக்கிறார்கள்! ஆனால், அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவோ தன்னுடைய ஹபீபை ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணியப்படுத்தி சிறப்பித்திருக்கிறான். யாருக்கும் வழங்காத பல்வேறு அந்தஸ்துகளை வழங்கி சிறப்பித்திருக்கிறான். அன்னார் மீது தன்னுடைய அருளையும், அன்பையும் பொழிந்து சிறப்பித்திருக்கிறான். இப்படியாக சிறப்புகளை எல்லாம் சிறப்பாக வழங்கி சிறப்பித்திருக்கிறான். அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கிய சிறப்புகளில் சிலவற்றைத்தான் இப்புத்தகத்தில் தொகுத்தெழுதியுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்.

இந்நூலில் பல்வேறு ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பல்வேறு ஹதீஸ் நூல்களிலிருந்து எடுத்து பயன்படுத்தியுள்ளேன். அவ்விதம் இப்புத்தகத்தில் நான் பயன்படுத்தியுள்ள ஹதீஸ் நூல்களின் மூல ஆசிரியர்களுக்கும், மொழிபெயர்ப்பு செய்தவர்களுக்கும், பதிப்பித்தவர்களுக்கும் எனது நன்றியினை காணிக்கையாக்குகிறேன். மேலும், அன்னவர்களின் ஹக்கில் துஆ செய்தவனாகவும் இருக்கிறேன்.

இப்புத்தகத்தில் என்னையறியாமல் ஏதேனும் குறைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சுட்டிக்காட்டி, திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால், இச்சிறிய புத்தகத்தைக் கொண்டு நம் அனைவருக்கும் பயன் கிடைக்கும்படி செய்வானாக. மேலும், குறைவின்றி இம்மை மறுமை பேறுகளையும் தந்தருள்வானாக. ஆமீன்.
சென்னை,

அன்பு சகோதரன்,
(ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி)

14 .6 .1430 ( 8 .6 .2009 ).

பொ௫ளடக்கம்

1 சிறப்பான தலைமுறை
2 பிறப்பு
3 திருப்பெயர்
4 மனிதகுலம் முழுமைக்கும் நபியாக
5 ஐந்து பேறுகள்
6 இறுதி நபி
7 உயிர்களைவிட மேலானவர்
8 நபிமார்களுக்கு இமாம்
9 ஸலவாத்து
10 இறை தரிசனம்
11 புனித மிஃராஜ் பயணம்
12 கவ்ஸர் நதி
13 போர்களில் வானவர்கள்
14 உடுக்கை இழந்தவன் கைபோல
15 ரஹ்மத்தல்லில் ஆலமீன்
16 ஷபாஅத்து
17 திருமதீனாவும் மஸ்ஜிதுந் நபவீயும்
18 தவ்ராத்திலும் இன்ஜீலிலும்
19 மாண்பும் மகிமையும்
20 அற்புதங்கள்

1.சிறப்பான தலைமுறை

அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை சிறப்பான வம்சா வழியிலேயே தேர்ந்தெடுத்திருக்கிறான். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வம்ச பாரம்பரியத்தில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதற்கொண்டு, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய தலைமுறை வரை வந்த அனைவருமே சிறப்பானவர்களாக இருந்தனர். இது குறித்த விவரம் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

“ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழி வழி வந்தவர்களில் மிகவும் மேலானவர்களிலிருந்துதான் நான் அனுப்பப்பட்டேன். நான் இருக்கும் இந்தத் தலைமுறை வரை ( அனைவரும் சிறப்பானவர்களாகவே இருந்தனர். )” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.

“இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித்தோன்றல்களில் கனானா குலத்தினரைத்தான் அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். கனானா குலத்தினரிடமிருந்து குறைஷி குலத்தினரை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். குறைஷிக் குலத்தினரிடமிருந்து பனூ ஹாஷிம் குலத்தினரை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். பனூ ஹாஷிம் குலத்தினரிடமிருந்து அவன் என்னைத் தேர்ந்தெடுத்தான்” என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்ம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: வாஸிலாதுப்னுல் அஸ்கஃ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: முஸ்லிம்.

ஒரு முறை மக்கள் பேசிகொண்ட சில விஷயங்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எட்டின. அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உடனே மிம்பரில் ஏறினார்கள். மக்களிடம், “நான் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “தாங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர்” என பதிலளித்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “நான் அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மது ( ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) ஆவேன். நிச்சயமாக அல்லாஹ் படைப்புகளைப் படைத்தான். என்னை அப்படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஆக்கினான். அந்த மக்களை அல்லாஹ் இரண்டு பிரிவினர்களாக ஆக்கினான். அதில் சிறந்த பிரிவினரில் நின்றும் என்னை ஆக்கினான். அம்மக்களை பல கோத்திரங்களாக அல்லாஹ் ஆக்கினான். அவற்றில் சிறந்த கோத்திரத்தில் நின்றும் அல்லாஹ் என்னை ஆக்கினான். அவர்களை அல்லாஹ் பல வீடுகளாக ( குடும்பத்தார்களாக ) ஆக்கினான். அவற்றில் சிறந்த குடும்பத்தில் என்னை ஆக்கினான். நான் உங்களில் சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறேன். மனத்தாலும் உங்களில் சிறந்தவனாக இருக்கிறேன். அறிவிப்பவர்: அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ( இமாம் அஹ்மது ).

மேலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வமிசத் தொடரில் இடம்பெற்றுள்ள அனைவருமே நிக்காஹ் உறவின் மூலமே பிறந்தவர்கள்! அவர்களில் எவருமே விபச்சாரத்தின் மூலம் பிறந்தவர்கள் அல்லர்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பேரர்களில் ஒருவரான இமாம் முஹம்மதுல் பாகிர் (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் நிக்காஹ் மூலமே ( என் பெற்றோர் மற்றும் மூதாதையர்களின் நிக்காஹ் உறவின் மூலமே ) வெளிப்படுத்தப்பட்டேன். விபச்சார உறவின் மூலம் அல்ல” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( அப்துர் ரஜ்ஜாக் )

ஒரு முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள். அதில் கூறினார்கள்: “நான் அப்துல்லாஹ்வின் மகன் ஆவேன். அவர் அப்துல் முத்தலிபின் மகனாவார். அவர் ஹாஷிமின் மகனாவார். அவர் அப்து முனாஃபின் மகன் ஆவார். அவர் குஸையின் மகன் ஆவார். அவர் கிலாபின் மகன் ஆவார். அவர் முர்ராவின் மகன் ஆவார். அவர் கஃபின் மகன் ஆவார். அவர் லுஅய்யின் மகன் ஆவார். அவர் காலிபின் மகன் ஆவார். அவர் பஃஹரின் மகன் ஆவார். அவர் மாலிகின் மகன் ஆவார். அவர் நள்ரின் மகன் ஆவார். அவர் கினானாவின் மகன் ஆவார். அவர் குஜைமாவின் மகன் ஆவார். அவர் முத்ரிகாவின் மகன் ஆவார். அவர் இல்யாஸின் மகன் ஆவார். அவர் முளரின் மகன் ஆவார். அவர் நிஜாரின் மகன் ஆவார். மக்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்தால், அதில் சிறந்த பிரிவிலேயே அல்லாஹ் என்னை ஆக்கி வைத்தான். என் பெற்றோரிலிருந்து அல்லாஹ் என்னை வெளிப்படுத்தினான். அறியாமைக் கால விபச்சாரத் தொடர்பு என்னைத் தொடவில்லை. நான் நிக்காஹ் மூலம் வெளியானேன். விபச்சாரத்தின் மூலம் வெளிப்படுத்தப்படவில்லை. ஆதம் ( அலைஹிஸ்ஸலாம் ) அவர்களிடமிருந்து என் தாய், தந்தை அளவில் நான் வந்து சேறும் வரை நிக்காஹ்வின் மூலமே கொண்டுவரப்பட்டேன். நான் உங்களில் சிறந்தவன். நான் உங்களின் வமிசத்திலும் சிறந்தவன். ( பைஹகீ ).

ஹளரத் இமாம் புகாரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவம் பற்றிய தலைப்பில், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வம்ச வரலாறு பற்றி கீழ்கண்டபடி குறிப்பிட்டிருக்கிறார்கள். (1) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள். (2) அப்துல்லாஹ், (3) அப்துல் முத்தலிப், (4) ஹாஷிம், (5) அப்துமனாப், (6) குஸய்யு, (7) கிலாப், (8) முர்ரா, (9) கஃபு, (10) லுவய்யு, (11) காலிப், (12) பிஹ்ர், (13) மாலிக், (14) நள்ர், (15) கினானா, (16) குஜைமா, (17) முத்ரிக்கா, (18) இல்யாஸ், (19) முளர், (20) நிஜார், (21) மஅத்து, (22) அத்னான்.

இவர்களில் கடைசியாக கூறப்பட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஆரம்பத் தந்தையான அத்னான் அவர்கள், ஹஜ்ரத் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பேரப்பிள்ளைகளில் உள்ளவராவார்!

இவ்விதம் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை சிறப்பான வம்சா வழியிலே தேர்ந்தெடுத்து சிறப்பித்திருக்கிறான்.

2.பிறப்பு

அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பையும் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா சிறப்பாக்கினான்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது பல்வேறு அதியங்களும் அற்புதங்களும் வெளிப்பட்டன. அதன் மூலம் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உயர்ந்த அந்தஸ்தை வெளிப்படுத்தி சிறப்பித்தான்.

யமன் நாட்டு மன்னனான அப்ரஹா புனித கஃபாவை இடிக்கும் நோக்கத்துடன் படையெடுத்து வந்தான். அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா அவனையும், அவனுடைய யானைப் படையையும் பொடிக்கற்களைக் கொண்டு அழித்தான்! புனித கஃபாவையும் காத்தருளினான். இந்த நிகழ்ச்சிக்கு ஐம்பது நாட்கள் கழித்து அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள். அதன்படி அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம், பன்னிரண்டாம் தேதி, திங்கட்கிழமை வைகறைப் பொழுதில் பிறந்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தேதி குறித்து அறிஞர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் தேதி பிறந்தார்கள் என்பதே பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது பல்வேறு அற்புதங்களும், அதிசயங்களும் நிகழ்ந்தன! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது ஒரு நூர் ( ஒளி ) வெளிப்பட்டது! வீடு ஒளியால் நிரம்பியது! நட்சத்திரங்கள் இறங்கி அன்னாரின் பக்கம் நெருங்கின!

அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தாயார் ஆமினா அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அண்ணலாரைப் பெற்றெடுத்த இரவில் ஒரு மாபெரும் ஒளியைப் பார்த்தேன். அதன் ஒளியில் ஷாம் நாட்டின் கோட்டைகள் இலங்குவதை நான் பார்த்தேன். (அபூ நுஅய்ம் )

உஸ்மான் பின் அபில் ஆஸ் தம்முடைய தாயாரும் ஸஹாபிப் பெண்மணியுமான உம்மு உஸ்மான் அஸ்ஸகபிய்யா அஸ்ஸஹாபிய்யா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்களின் வாயிலாக அறிவிக்கிறார்கள்: நபியவர்களின் பிரசவத்தின் பொழுது நான் அவர்களின் இல்லத்தில் இருந்தேன். அவர்கள் பிறந்ததும் அவர்களின் வீடு ஒளியால் நிரம்பியது. நட்சத்திரங்கள் இறங்கி அவர்களின் பக்கம் நெருங்கி வந்துவிட்டன. எந்த அளவெனில் என் மீது அவை விழுந்து விடும் என நான் எண்ணுகிற அளவுக்கு நெருங்கின! அண்ணலாரை, ஆமினா பெற்றெடுத்ததும் அவர்களிடமிருந்து ஒரு ஒளி வெளிப்பட்டது. அவ்வொளியில் அந்த அறையும், அந்த வீடும் பிரகாசித்தது! அதனால் ஒளியைத் தவிர வேறு எதையும் பார்க்காதவளாக நான் ஆகிவிட்டேன். ( பைஹகீ, திப்ரானி ).

இமாம் இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “அல்பிதாயா வந்நிஹாயா” என்னும் நூலில் பின்வரும் அற்புதங்களையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள்: அணணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது ஒரு நூர் வெளிப்பட்டது. அது பூமியில் இறங்கி மண்டியிட்டு நின்றது! வானத்தின் பக்கம் தன் தலைப்பாகத்தை உயர்த்தியது. அண்ணலார் பிறந்த இல்லத்தில் ஒளி பரவியது. வானிலுள்ள நட்சத்திரங்கள் அவர்களை நெருங்கி வந்தன. கிஸ்ரா மன்னனின் மாடங்கள் அசைந்தாடி இடிந்து விழுந்தன. நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த நெருப்பு நூர்ந்துவிட்டது! இவை தவிர மற்றும் பல அற்புதங்களும் நிகழ்ந்தன.

மக்ஜூம் பின் ஹானி என்பவர் தம் தந்தை வாயிலாக அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இரவில் கிஸ்ரா மன்னனின் மாடங்கள் உடைந்தன. அவற்றில் பதினான்கு மாடங்கள் இடிந்து கீழே விழுந்தன. ஆயிரம் ஆண்டுகளாக நூர்ந்து விடாது எரிந்துக் கொண்டிருந்த பாரசீக நாட்டின் நெருப்புக் குண்டம் நூர்ந்தது. “ஸாவா” நகரத்தில் இருந்த சிறிய கடல் போன்ற ஏரி வற்றிப்போனது. ( பத்ஹூல் பாரி ). இந்த அற்புதங்களை ஹதீஸ் அறிவிப்பாளர்களான இமாம்கள் பைஹகீ, அபூ நுஅய்ம், கராஇதி, இப்னு அஸாகிர், இப்னு ஜரீர் போன்ற மார்க்க மாமேதைகளும் கூறியுள்ளனர்.

இப்படியாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பையும் சிறப்பாக்கி, அன்னாரின் சிறப்பையும், அன்னாரின் தூதுவத்தையும் வெளிப்படுத்தியுள்ளான்.

3.திருப்பெயர்

நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் முஹம்மத் என்பதாகும். இத்திருப்பெயரை அன்னாரின் பாட்டனார் ஹளரத் அப்துல் முத்தலிப் அவர்கள் சூட்டி மகிழ்ந்தார்கள். “இத்திருப்பெயரை சூட்ட காரணமென்ன?” என்று மக்கள் கேட்டபோது, ” இப்பிள்ளைக்கு முஹம்மத் என்னும் திருப்பெயரையே சூடடும்படி கனவின் மூலம் அறிவுறுத்தப்பட்டேன். இப்பிள்ளையின் புகழ் உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எதிரொலிக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் ” என பதில் கூறினார்கள். முஹம்மத் என்னும் திருப்பெயருக்கு ” புகழப்பட்டவர் ” என்பது பொருளாகும்.

அன்னை ஆமினா அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ‘அஹ்மது’ என்னும் திருப்பெயரை சூட்டினார்கள். அன்னை ஆமினா அவர்கள் நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கருவுற்றிருக்கும் போது, அன்னாருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும், அக்குழந்தைக்கு அஹ்மது என்னும் திருப்பெயரை சூட்டும்படியும் கனவின் மூலம் அறிவுறுத்தப்பட்டனர். அதன்படியே அன்னை ஆமினா அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அஹ்மது என்னும் திருப்பெயரை சூட்டினார்கள். அஹ்மது என்னும் திருப்பெயருக்கு ‘புகழ்பவர்’ என்பது பொருளாகும். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் போல் புகழப்பட்டவரும் எவருமில்லை. ஒவ்வொரு கணமும் வானவர்களும், மனிதர்களும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து என்னும் புகழ்மொழியை ஓதிக் கொண்டுதானே இருக்கிறார்கள்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் போல் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவை புகழ்ந்தவரும் எவருமில்லை! அதனால்தான் இத்திருப் பெயர்களை அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா சூட்டச் செய்தான் போலும்!

முஹம்மது, அஹ்மது என்னும் இவ்விரு திருப்பெயர்களும் திருக்குர்ஆனில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளன. முஹம்மது என்னும் திருப்பெயர், ஸூரத்துல் ஆலஇம்ரான், வசனம் – 144, ஸூரத்துல் அஹ்ஜாப், வசனம் – 40, ஸூரத்து முஹம்மது, வசனம் – 2, ஸூரத்துல் பஃத்ஹ், வசனம் – 29 , ஆகிய நான்கு இடங்களில் கூறப்பட்டுள்ளது. அஹ்மது என்னும் திருப்பெயர் ஸூரத்துஸ் ஸஃப்பு, வசனம் – 6 ல் இடம்பெற்றுள்ளது.

நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் தவ்றாத் வேதத்தில் முஹம்மது என்பதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஸூரத்துல் பஃத்ஹ், வசனம் – 29 ல் கூறப்பட்டுள்ளது. இன்ஜீலில் (பைபிளில் ) நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் அஹ்மது என கூறப்பட்டுள்ளது. இதுபற்றி, ” மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: ” இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும் ; எனக்குப் பின்னர் வரவிருக்கும் ” அஹ்மது ” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன் ” என்று கூறிய வேளையை ( நபியே! நீர் நினைவு கூறுவீராக! ) என்று, ஸூரத்துஸ் ஸஃப்பு, வசனம் – 6 ல் கூறப்பட்டுள்ளது.

மேலும், அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை ‘முத்தஸ்ஸிர்’ (போர்த்திக் கொண்டு இருப்பவரே! ) என்று அழைத்திருக்கிறான். இது குறித்த விவரம் ஸஹீஹூல் புகாரீயில் இடம் பெற்றுள்ளது.

வஹீ (தெய்வ அறிவிப்பு) நின்றிருந்ததைக் குறித்து ஜாபிறுப்னு அப்தில்லாஹில் அன்ஸாரி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் கூறியபோது, “நான் நடந்துக் கொண்டிருக்கும் போது வானிலிருந்து ஒரு சப்தத்தைச் செவியேற்று, என் தலையை உயர்த்தினேன். அப்பொழுது ஹிராவில் என்னிடம் வந்த அதே வானவர், வானுக்கும் பூமிக்குமிடையில் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். உடனே, அவருக்கு நான் பயந்து திரும்ப (வீட்டுக்கு ) வந்து “எனக்குப் போர்த்துங்கள், எனக்குப் போர்த்துங்கள்” என்று கூறினேன். ( துப்பட்டியை போர்த்திவிட்டார்கள். அப்பொழுது )

“(1) ( போர்வை ) போர்த்திக் கொண்டு இருப்பவரே! (2) நீர் எழுந்து ( மக்களுக்கு ) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. (3) மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக. (4) உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக. (5) அன்றியும் அசுத்தத்தை வெறுத்து ( ஒதுக்கி ) விடுவீராக” என்னும் வசனங்களை அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா அருளினான். ( பார்க்க: அத்தியாயம் 74, ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் – 1 – 5 . ) வஹீ தொடர்ந்து வந்தது” என்று ( அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ) கூறியதாக அவர் சொன்னார். அறிவிப்பவர்: ஜாபிறுப்னு அப்தில்லாஹி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.

இதன் காரணமாக முத்தஸ்ஸிர் என்பதும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயராக உள்ளது. இதைப் போலவே அத்தியாயம் 73, ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் 1 – ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘முஸ்ஸம்மில்’ என்பதும் அண்ணல் நபீ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப் பெயராக உள்ளது.

“(1) தாஹா. (2) ( நபியே! ) நீர் துன்பப் படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை. ” இவை, அத்தியாயம் 20, ஸூரத்து தாஹாவின் தொடக்க வசனங்களாகும். இதில், முதல் வசனமாக கூறப்பட்டுள்ள ‘தாஹா’ என்பதும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் திருப்பெயரேயாகும் என சில அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது. ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 6, பக்கம் – 64 . )

இப்னு ஜூபைர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், அத்தியாயம் 36, ஸூரத்து யாஸீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘யாஸீன்’ என்பதும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயரே என அறிவித்திருக்கிறார்கள். ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 7, பக்கம் – 363 . ) ஹூரத்துல் அஃராஃப், 157, 158 வசனங்களில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ( எழுதப் படிக்கத் தெரியாத ) ‘உம்மி’ நபி என அழைக்கப் பட்டிருக்கிறார்கள்.

நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர்களைப் பற்றி ஸஹீஹில் புகாரி ஷரீபில், கீழ்கண்ட ஹதீஸ் உள்ளது. ” எனக்கு ஐந்து பெயர்களிருக்கின்றன. நான் முஹம்மது, அஹ்மது ( என்னும் பெயர்களுள்ளவர் ) . நான்தான் அல்மாஹீ, அதாவது என் மூலமாக அல்லாஹ் குப்ரை அழிக்கிறான. நான்தான் அல்ஹாஷிர், அதாவது இறுதி நாளில் எனக்குப் பின்னர்தான் மனிதர் யாவரையும் அல்லாஹ் ( உயிர்த் தெழுப்பி ) ஒன்று சேர்ப்பான். நான்தான் கடைசி நபி. ( எனக்குப் பின்னர் நபி இல்லை ) ” என்று நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜூபைறுப்னு முத்இம் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். இந்த ஹதீஹில், நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஐந்து பெயர்கள் கூறப்பட்டுள்ளன.

இப்படியாக திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய திருப்பெயர்கள் பலவும் கூறப்பட்டுள்ளன. இத்திருப் பெயர்கள் யாவும் நபிமார்களால் அறிவிக்கப் பட்டவையும், வேத நூல்களில் சொல்லப்பட்டவையுமாகும். இவை தவிர இன்னும் பல்வேறு திருப்பெயர்களும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உள்ளன. அவை விர்து ( ஜபம் ) நுல்களில் விரிவாக எழுதப்பட்டுள்ளன.

அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா தன்னுடைய ஹபீபு, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர்களை கண்ணியப் படுத்தியிருக்கிறான். இதற்கு சாட்சியாக திருக்குர்ஆன் இருக்கிறது. திருக்குர்ஆனில். நபிமார்களை குறிப்பிட்டுக் கூறும் பொழுது அவர்களுடைய பெயர்களைக் கொண்டே அழைக்க ப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குறிப்பிட்டுக் கூறும் பொழுது ‘யா ஆதமு’ ( ஆதமே! ) என்றே கூறப்பட்டிருக்கிறார்கள். இதைப்போலவே நூஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா நூஹூ’ ( நூஹே! ) என்றே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா இப்ராஹீமே’ (இப்ராஹீமே! ) என்றும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா மூஸா’ ( மூஸாவே! ) என்றும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா ஈஸா’ (ஈஸாவே! ) என்றும் திருக்குர்ஆனில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்விதமே மற்ற நபிமார்களும் பெயர்களைக் கொண்டே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யா முஹம்மத்’ என்றோ, ‘யா அஹ்மத்’ என்றோ பெயரைக் கொண்டு அழைக்கப்படவில்லை! இதற்கு மாறாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை குறிப்பிட்டுக் கூறும் இடங்களில் பெரும்பாலும் ‘யா அய்யுஹன் நபியு’ ( நபியே! ) என்றோ, ‘யா அய்யுஹர் ரஸூலு’ ( தூதரே! ) என்றோ, ‘யா அய்யுஹல் முஸ்ஸம்மிலு’ ( போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! ) என்றோ, ‘யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்’ ( ( போர்வை ) போர்த்திக் கொண்டு இருப்பவரே! ) என்றோதான் அழைக்கப்பட்டுள்ளார்கள்! திருக்குர்ஆன் முழுமையிலும் வெறும் நான்கு இடங்களில் மட்டும்தான் – அதுவும் தேவையைக் கருதி, முஹம்மத் என்னும் திருப்பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்! இவ்விதமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர்கள் திருக்குர்ஆனில் கண்ணியப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விவரங்களை ஹளரத் முஃப்தி முஹம்மத் ஷபீஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மஆரிபுல் குர்ஆன், பாகம் – 8, பக்கம் – 91 ல், ஸூரத்துல் பஃத்ஹூ, வசனம் – 29 க்கான தப்ஸீரில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.

மேலும், திருக்கலிமா, பாங்கு, இகாமத் மற்றும் இது போன்ற காரியங்களில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவை நினைவு கூறும்போதெல்லாம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயரையும் சேர்த்து நினைவுகூறும்படியாக அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா ஏற்பாடு செய்திருக்கின்றான். இவ்விதமாகவும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் சிறப்பிக்கப்பட்டுள்ளது. ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 7, பக்கம் – 222. )

இவ்விதம் சிறப்பிற்கும், கண்ணியத்திற்கும் உரிய அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயரை கூறும்போதும், கேட்கும்போதும் அன்னார் மீது ஸலவாத் ஓதுவது ஈமான் கொண்ட அனைவர் மீதும் வாஜிபு ஆகும். ஏனெனில், “எவர் முன்னிலையில் என் பெயர் கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத்துக் கூறவில்லையோ அவருடைய மூக்கை மண் அரிக்கட்டும்!’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் திர்மிதீயில் இடம்பெற்றுள்ளது. இன்னொரு ஹதீஸில், “எவர் முன் என்னைக் குறிப்பிடப்பட்டு, அவர் என் மீது ஸலவாத்துக் கூறவில்லையோ அவரே ( உண்மையில் ) உலோபியாவார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸை ஹளரத் அலி கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த ஹதீஸூம் திர்மிதீயில் உள்ளது.

4.மனிதகுலம் முழுமைக்கும் நபியாக

அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பல்வேறு அந்தஸ்துகளை வழங்கி சிறப்பித்திருக்கிறான். அவற்றில் ஒன்று, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை மனிதகுலம் முழுமைக்கும் நபியாகவும், றஸூலாகவும் ஆக்கியிருப்பது.

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனிதகுலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை ; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை ) அறியமாட்டார்கள். ( ஸூரத்துஸ் ஸபா, வசனம் – 28. )

திருக்குர்ஆனின் இந்த வசனத்தில், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதகுலம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டிருக்கும் விஷயம் கூறப்பட்டுள்ளது.

அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட நபிமார்களும், றஸூல்மார்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாருக்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் உள்ளவர்களுக்கோதான் நபியாகவும், றஸூலாகவும் அனுப்பப்பட்டார்கள். இதுகுறித்தும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஹளரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், பிர்அவ்னிடமும் அவனுடைய சமுதாயத்தாரிடமும் நபியாக அனுப்பப்பட்டார்கள். இதுகுறித்து திருக்குர்ஆனில்,

மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன் பிர்அவ்னிடமும், அவனுடைய சமுதாய தலைவர்களிடமும் திட்டமாக நாம் அனுப்பி வைத்தோம், என ஸூரத்துஜ் ஜூக்ருஃப், வசனம் – 46 ல் கூறப்பட்டுள்ளது.

ஹளரத் நூஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அவர்களது சமூகத்தார் மட்டிலும் நபியாக அனுப்பப்பட்டார்கள்.

இன்னும்: நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ( ஸூரத்துல் முஃமினூன், வசனம் – 23. )

ஸமூது சமூகத்தாரிடம், ஹளரத் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்கள். இதுகுறித்து திருக்குர்ஆனில், “தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை: “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” ( என்று போதிக்குமாறு ) அனுப்பினோம் ;” என கூறப்பட்டுள்ளது. (ஸூரத்துல் நம்ல், வசனம் – 45. )

மத்யன் என்னும் இடத்திற்கு ஹளரத் ஷூஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்கள். ஸூரத்து ஹூது, வசனம் – 84 ல், “மத்யனி (நகரத்தி) லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷூஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம்” என இதுகுறித்து கூறப்பட்டுள்ளது.

அதைப்போலவே ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். “அவர் ( ஈஸா நம்முடைய ) அடியாரே அன்றி வேறில்லை ; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (ஸூரத்துஜ் ஜூக்ருஃப், வசனம் – 59.)

இப்படியாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் வந்த நபிமார்கள் யாவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாரிடமோ, அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தாரிடமோ மட்டுமே நபியாக அனுப்பப் பட்டார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டமே மனிதகுலம் முழுவதற்கும் நபியாகவும், றஸூலாகவும் அனுப்பப்பட்டார்கள். இது, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா வழங்கியுள்ள சிறப்பாகும்.

மேலும், இதுகுறித்து மஆரிபுல் குர்ஆனில், ஸூரத்துஸ் ஸபா, வசனம் – 28 க்கான விரிவுரையில் கீழ்கண்டவாறு எழுதப் பட்டுள்ளது:

அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் அனுப்பப்பட்ட நபிமார்கள் யாவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாருக்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் உள்ளவர்களுக்கோ மட்டும்தான் நபியாக அனுப்பப் பட்டார்கள். ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதகுலம் முழுவதற்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள். மனிதகுலத்திற்கு மட்டுமின்றி, ஜின் வர்க்கத்தாருக்கும் கூட நபியாக அனுப்பப்பட்டார்கள். அரபு நாட்டிற்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள். தாம் வாழ்ந்த காலத்திற்கு மட்டுமின்றி கியாமத்து நாள் வரைக்குமான நபியாகவும் அனுப்பப்பட்டார்கள். ஏனெனில், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே இறுதி நபியாகவும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 7, பக்கம் – 293. )

அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதகுலம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டது பற்றி ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளது. “நபிகள் (இதற்கு முன்) தங்கள் சமூகத்தாருக்கு மட்டிலுமே அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். மக்கள் அனைவருக்கும் ( மனித வர்க்கம் முழுவதற்கும் பொது நபியாக ) நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஹளரத் ஜாபிர் இப்னு அப்தில்லாஹி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் புகாரீ ஷரீபில் இடம்பெற்றுள்ளது.

இப்படியாக, அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை மனிதகுலம் முழுமைக்கும் நபியாக அனுப்பி சிறப்பித்திருக்கிறான்.

5.ஐந்து பேறுகள்

அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் விசேஷமாக ஐந்து பேறுகளை வழங்கி சிறப்பித்திருக்கிறான். இந்த ஐந்து பேறுகளை அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா வேறு எவருக்குமே வழங்கவில்லை!

(1) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்லம் அவர்களின் திருப்பெயரை கேட்டே மக்கள் பணிந்தனர். இதன் காரணமாக போர் செய்யவேண்டிய அவசியமில்லாமலேயே ஒரு மாத வழி தூரமுள்ள நாடுகள் பணிந்தன. இந்த பேறு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா வழங்கி யிருக்கிறான்.

(2) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் அனுப்பப்பட்ட நபிமார்கள் மஸ்ஜிதில் மட்டுமே தொழ அனுமதிக்கப் பட்டனர். இதனால் மஸ்ஜிது அல்லாத வேறு இடங்களில் தொழ அவர்களால் முடியாதிருந்தது. ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த பூமி முழுவதும் ஸூஜூது செய்யும் இடமாக அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால், அண்ணல் நபி ஸ்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர் மஸ்ஜிதுகளிலும் தொழுது கொள்ளலாம். மஸ்ஜிது இல்லாத இடங்களில் தாம் இருக்கும் இடத்திலேயே தொழுது கொள்ளலாம். இவ்விதமாக பூமியின் எப்பகுதியிலும் தொழுது கொள்ள இந்த உம்மத்தினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூமி முழுவதும் ஸூஜூது செய்யும் இடமாக ஆக்கி அருளப்பட்டுள்ள இந்த பேறும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

(3) போர்க்களத்தில் பகைவர்கள் விட்டுச்சென்ற பொருள்களை எடுத்து அனுபவித்துக்கொள்ள முற்காலத்து நபிமார்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, போரில் பகைவர்கள் விட்டுச் செல்லும் பொருட்களை எடுத்து உபயோகித்துக் கொள்ள அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா அனுமதித்துள்ளான். இந்த பேறும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.

(4) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஷபாஅத்து ( பரிந்துரை ) செய்யும் பேறும் அளிக்கப்பட்டுளளது. மறுமை நாளில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா மனிதர்களில் முந்தியவர்களையும், பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்று திரட்டுவான். அப்போது மனிதர்களிடம் அவர்களால் தாங்கிக் கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ இயலாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும். அப்போது மனிதர்களில் சிலர் சிலரை நோக்கி, “நீங்கள் இருக்கும் நிலையைக் கவனிக்கவில்லையா? உங்களுக்கு எத்தகைய நிலை நேரந்திருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரைத் தேடிப் பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்பார்கள். அப்போது மக்கள் நபிமார்களிடம் சென்று, தமக்கு நேர்ந்திருக்கும் துன்ப நிலையை அகற்ற அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவிடம் பரிந்துரை செய்யும்படியாக முறையிடுவார்கள். முதலில் ஹளரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும், பிறகு ஹளரத் நூஹூ, ஹளரத் இப்ராஹீம், ஹளரத் மூஸா, ஹளரத் ஈஸா அலைஹிமுஸ் ஸலாத்து வஸ்ஸலாம் ஆகிய எல்லா நபிமார்களிடமும் முறையிடுவார்கள். ஆனால், அந்நாளில் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவிடம் பரிந்துரை செய்ய எந்த நபிமாரும் முன்வரமாட்டார்கள். அச்சமயம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே, மனிதவர்க்கத்தாருக்காக அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவிடம் ஷபாஅத்து (பரிந்துரை) செய்யும் பேறு பெற்றிருப்பார்கள். அவ்வேளை, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவிடம், மனிதவர்க்கத்தாருக்காக பரிந்துரை செய்வார்கள். அந்த பரிந்துரையின் பயனாக மனிதவர்க்கம் முழுவதும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த கஷ்டத்திலிருந்து மீட்சி பெறுவார்கள். இந்த பேறு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே உரியதாகும்.

(5) அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை மனிதகுலம் முழுமைக்கும் பொது நபியாக ஆக்கி அனுப்பினான். ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் அனுப்பப்பட்ட நபிமார்கள் யாவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாருக்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டனர். மனிதகுலம் முழுவதற்கும் பொது நபியாக அனுப்பப்பட்டவர் என்னும் சிறப்பு – பேறு, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்றது.

அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் சிறப்பாக அளிக்கப்பட்ட இந்த ஐந்து விசேஷ பேறுகளைப் பற்றிய விவரம், புகாரீ ஷரீபில் உள்ள கீழ்கண்ட ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது:

“எனக்கு ஐந்து காரியங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு முன்னர் ஒருவருக்கும் அவைகள் அளிக்கப்படவில்லை. ஒரு மாதத் தொலைவு தூரம் ( உள்ள பிரதேசம் ) வரை திடுக்கத்தால் (மட்டும் யுத்தமின்றி ) வெற்றியடைந்தேன். எனக்கு பூமி முழுவதம் ஸூஜூது செய்யும் இடமாகவும் சுத்தமானதாகவும் ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய உம்மத்தில் ஒருவருக்கு எந்த இடத்தில் தொழுகைக்கு நேரமானாலும் அவர் தொழுதுவிடவேண்டும். எனக்கு பகைவர் விட்டுச் சென்ற பொருள்கள் அனுமதிக் கப்பட்டிருக்கின்றன. எனக்கு முன்னருள்ள ( நபிமார்களில் ) எவருக்கும் அது அனுமதிக்கப்படவில்லை. எனக்கு ஷபாஅத்துச் செய்யும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. நபிமார்கள் (இதற்கு முன்) தங்கள் சமூகத்தாருக்கு மட்டிலுமே அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். மக்கள் அனைவருக்கும் ( மனித வர்க்கம் முழுவதற்கும் பொது நபியாக ) நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.

மேலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, மற்ற சமூகத்தினரை விட மூன்று விஷயங்களில் மேன்மை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஹதீஸ்: “மற்ற சமூகத்தினரை விட மூன்று விஷயங்களில் நமக்கு மேன்மை அளிக்கப்பட்டுள்ளது. (1) நம் படை அணி வானவர்களின் படை அணியைப் போன்று ஆக்கப்பட்டு விட்டது. (2) பூமி எல்லாம் நமக்குத் தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது. (3) நாம் தண்ணீரை அடையவில்லை என்றால், அதன் மண்ணும் நமக்குத் துப்புரவு அளிக்கும் பொருளாக ஆக்கப்பட்டுள்ளது” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹூதைஃபா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம்.

6.இறுதி நபி

இந்த உலகத்தில் இறைவனுக்கு மாறு செய்யும் காரியங்களும், இறைவனுக்கு இணைவைக்கும் காரியங்களும், பாவகரமான காரியங்களும் பெருகிடும் போது, மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா நபிமார்களை அனுப்பிவைத்தான். இவ்விதம் இந்த உலகத்தில் அனுப்பப்பட்ட நபிமார்களின் உண்மையான எண்ணிக்கையை அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவே நன்கு அறிவான். ஆனால், இந்த உலகத்தில் இறுதி நபியாக அனுப்பப்பட்டவர் என்னும் சிறப்பு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கே கிடைத்துள்ளது. இதைப்பற்றி திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதாவது:

“முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்க வில்லை ; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி(முத்திரை)யாகவும் இருக்கின்றார் ; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (ஸூரத்துல் அஹ்ஜாப், வசனம் – 40. )

அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா திருக்குர்ஆனின் இந்த வசனத்தில், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபிமார்களுக்கெல்லாம் இறுதி முத்திரையாக இருக்கின்றார், எனக் கூறியுள்ளான். இதன்மூலம், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் நபித்துவம் முடிந்துவிட்டது, இனி உலகில் எவரும் ‘நபி’ என்ற அந்தஸ்துடன் அனுப்பப்படமாட்டார்கள் என்ற உண்மையையும் வெளிப்படுத்தியுள்ளான்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காதமன் நபியீனாக – நபிமார்களின் முத்திரையாக அனுப்பப்பட்டிருப்பது அன்னாரின் பிரத்யேகமான, பூரணத்துவம் பெற்ற, உயர்ந்த ஸ்தானத்தை வெளிப் படுத்துகிறது. ஏனெனில், எந்த ஒரு காரியமும் ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்து, தொடர்ந்து, முடிவை அடைகிறது. காரியத்தின் இறுதி நிலையான ‘முடிவு’ என்பது, எந்த நோக்கத்திற்காக காரியம் ஆரம்பிக்கப்பட்டதோ, அக்காரியம் முழுமை பெற்று, அதன் நோக்கமும் நிறைவேறிவிட்டது என்பதையே காட்டுகிறது. ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 7, பக்கம் – 161. )

இந்த உலகில் எந்த நோக்கத்திற்காக நபிமார்கள் அனுப்பப்பட்டார்களோ அந்த நோக்கம் முழுமை பெற்றுவிட்டது என்பதையே அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபிமார்களின் முத்திரையாக அனுப்பப்பட்டிருப்பது காட்டுகிறது. இதற்கு அனுகூலமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதகுலம் முழுவதற்கும் பொது நபியாக அனுப்பப் பட்டிருக்கிறார்கள். கியாமத்து (இறுதி) நாள் வரைக்குமான காலத்திற்கும் நபியாக ஆக்கப் பட்டிருக்கிறார்கள். மேலும், கியாமத்து நாள் வரைக்குமான மக்களுக்கு வழிகாட்டியாக, வேதநூலாக திருக்குர்ஆன் அளிக்கப் பட்டிருக்கிறது. திருக்குர்ஆனை கியாமத்து நாள் வரையிலும் பாதுகாப்பதற்கான பொறுப்பை அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவே ஏற்றுக் கொண்டுள்ளான். கியாமத்து நாள் வரைக்கும் நடைமுறைப்படுத்தும் விதமாக ஷரீஅத் வகுத்தளிக்கப் பட்டிருக்கிறது. உலக மக்களுக்கு ‘வாழ்க்கை வழிகாட்டியாக’ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஸூன்னத்தான நடைமுறைகள் அமைந்துள்ளன. இவ்விதமாக, அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை இறுதி நபியாக அனுப்பியும், அதற்கு அனுகூலமாக பல்வேறு விஷயங்களை ஏற்படுத்திக் கொடுத்தும் சிறப்பித்திருக்கிறான்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காதமன் நபியீனாக அனுப்பப்பட்டிருப்பது பற்றி பல்வேறு ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில:

அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் இரு விரல்களை (அதாவது) நடுவிரலையும், பெருவிரலுக்கு அடுத்துள்ளதையும் ( ஆள்காட்டி விரலையும் ) இணைத்து, நானும் ( நியாயத் தீர்ப்புக்குரிய ) அவ்வேளையும் இவ்வாறு இருக்கும் நிலையில் (நபியாக) அனுப்பப்பட்டேன் என்று கூற நான் பார்த்தேன். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.

“நான் உலக முடிவு நாளுக்குரிய அடையாளத்திலேயே அனுப்பப்பட்டுள்ளேன். ஆனால் அதற்கு நான் முந்திக் கொண்டுவிட்டேன். இந்த (கலிமா) விரல் இந்த (நடு) விரலுக்கு முந்தி இருப்பது போல்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி தங்களின் சுட்டு விரலையும் நடு விரலையும் சாடை செய்து காட்டினார்கள். அறிவிப்பவர்: மிஸ்தவ்ரிதுப்னு ஷத்தாதில் கிஹ்ரிய்யி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: திர்மிதீ.

“என்னுடைய நிலையும், (ஏனைய) நபிமார்களின் நிலையும் ஒரு மனிதன் ஒரு வீட்டைக் கட்டி ஒரு செங்கல்லுடைய இடத்தைத் தவிர அதனை பூர்த்தி செய்து அதனை அழகாக்கியதையும், மக்கள் அதில் நுழைந்து ஆச்சரியப்பட்டு, இந்தச் செங்கலுடைய இடம் ( மட்டும் குறையாக இருக்கிறதே, இந்தக் குறையும் ) இல்லாமல் இருக்கக்கூடாதா? என்று கூறுவதையும் போலிருக்கிறது” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.

ஹளரத் அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் கூறிய மற்றோர் அறிவிப்பில்: “ஒரு மூலையில் ஒரு செங்கல்லுடைய இடம் காலியாக இருக்கிறதே என்று மக்கள் கூறுவதைப் போலிருக்கிறது” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகச் சொல்லிவிட்டு, அதன் முடிவில், “நான் தான் அந்தச் செங்கல், நான் தான் இறுதிநபி” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகவும் சொல்லப் பட்டிருக்கிறது.

“அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக்குக்குப் புறப்பட்டார்கள். அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ ) அவர்களை பிரதிநிதியாக நியமித்தார்கள். ‘பையன்களிடமும், பெண்களிடமும் என்னைப் பிரதிநிதி யாக்குகிறீர்களா?’ என்று அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் வினவினார்கள். அதற்கு, “மூஸாவுக்கு ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடத்தில் நீர் இருக்க விரும்பமாட்டீரா? என்றாலும், எனக்குப் பின்னர் (வேறு ) நபியே இல்லை” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.

இந்த ஹதீஸ்கள் மூலமாகவும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே இறுதி நபியாக அனுப்பப் பட்டிருக்கிறார்கள் என்னும் உண்மையை அறியலாம். மேலும், ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீண்டும் இவ்வுலகில் வரக்கூடியவராக இருக்கிறார்கள். அவ்விதம் அன்னார் மீண்டும் இவ்வுலகில் வரும்போது ஒரு நபியாக வரமாட்டார்கள். ஒரு சாமான்யராகவே வருவார்கள். எனவே, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே நபிமார்களின் முத்திரையாக – நபிமார்களில் இறுதிநபியாக இருக்கிறார்கள். அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா இந்த சிறப்பையும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கே வழங்கியிருக்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக