ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இறைத்தூதரின் பிறந்தநாளை விழாவாகக் கொண்டாடலாமா?- டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி



நாம் அனைவரும் அறிவோம், அல்லாஹ்வின் தூதரின் தோழர்கள் நபி(ஸல்...)அவர்களின் பிறந்த நாளையோ, ஹிஜ்ரி புத்தாண்டையோ, பத்ருப்போர் நடந்த தினத்தையோ விழாவாகக் கொண்டாடவில்லை என்று. ஏனெனில் அவர்கள் அந்த நபி(ஸல்...) அவர்களின் வாழ்நாளில் அதனையெல்லாம் நேரடியாக கண்ட சாட்சிகள். மேலும் அவர்கள் அந்நிகழ்வுகளை என்றும் தங்கள் உள்ளங்களில் பாதுகாத்து வந்தார்கள்.


சஅத் அபீவக்காஸ்(ரலி...) கூறுகிறார்கள்: "நாங்கள் ஆர்வத்துடன் எங்கள் குழந்தைகளுக்கு நபி(ஸல்...) அவர்களின் வாழ்நாளில் நடந்த போரின் வரலாறுகளையெல்லாம் சொல்லிக் கொடுத்தோம்". மேலும் முறையாக குர்ஆனையும் கற்றுக் கொடுத்தோம் என்கிறார்கள்.

நபித்தோழர்கள் நபிகளாரின் வாழ்நாளில் நடந்தவைகளை தங்கள் குழந்தைகளுக்கு நினைவூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆதலால் நபிகளாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஆயினும் தொடர்ந்து வந்த தலைமுறைகள் அந்த மேன்மைப் பொருந்திய வரலாற்றையும், அதன் முக்கியத்துவத்தையும் மறக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால் அத்தகையதொரு விழாக்கள் நடத்தப்பட்டால் அவைகள் அந்த மிகப்பெரிய நிகழ்வுகளை உயிர்ப்பிப்பதாகவும், அதன்மூலம் அதன் மதிப்பீடுகளை அந்த வரலாற்றிற்கு சொந்தக்காரர்களிடமிருந்து கற்கும் விதத்திலும் அமையவேண்டும்.

நபிகளாரின் வாழ்வையும் அவர்களுடைய அழைப்பையும் நினைவூட்டுவதற்காக துவங்கப்பட்ட இவ்விழாக்களில் எதிர்பாராதவிதமாக நவீனங்கள்(பித்அத்) நுழைந்துவிட்டன. உண்மையில் நபிகளாரின் பிறந்தநாளை கொண்டாடுவது என்பது இஸ்லாத்தின் மறுவரவைக் கொண்டாடுவது போலாகும். இத்தகைய நிகழ்ச்சிகளின் நன்னோக்கம் மக்களுக்கு நபிகளார் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை நினைவூட்டுவதற்காக இருக்கவேண்டும்.

அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்: "அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது." (அல்குர்ஆன் 33:21).

நபி(ஸல்...)அவர்கள் மேற்க்கொண்ட ஹிஜ்ராவைக் கொண்டாடும் பொழுது மக்களுக்கு ஹிஜ்ராவின் படிப்பினைகளையும், தியாகத்தையும், நபித்தோழர்களின் தியாகத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அலீ(ரலி...)அவர்களின் தியாகம், அவர்கள் நபி(ஸல்...)அவர்கள் ஹிஜ்ரத் புறப்பட்டபிறகு அவர்களுக்கு பகரமாக மக்காவிலிலுள்ள அவர்களுடைய வீட்டின் படுக்கையில் எதிரிகளுக்கு பயப்படாமல் படுத்திருந்தார்களே! அதனை நினைவுக் கூறவேண்டும். ஹிஜ்ரத்தின் போது நபிகளாரை சந்திக்க தவ்ர் குகைக்கு ஏறிச்சென்ற அஸ்மா(ரலி...)அவர்களின் தியாகத்தை நினைவுக் கூறவேண்டும். ஹிஜ்ரத்தின் போது நபிகளார் எவ்வாறு அதனை திட்டமிட்டார்கள், எவ்வகையிலான வழிகளை தேர்ந்தெடுத்தார்கள் என்பதையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஹிஜ்ரத்தின் போது தவ்ர் குகையில் அபூபக்கர்(ரலி...)அவர்கள் கேட்டக்கேள்விக்கு நபி(ஸல்...)அவர்கள் அளித்த பதிலை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்: "நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், "கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்." (அல்குர்ஆன் 9:40).

நாம் இந்த தினங்களை கொண்டாடும் பொழுது அவற்றிலிருந்து கிடைக்கும் பாடங்களையும், மதிப்பீடுகளையும் நினைவுறுத்த வேண்டும். நான் நினைக்கிறேன் இந்த தினங்கள் முறையாக கொண்டாடப்படுமானால் நாம் அவற்றை மிகப்பெரிய நன்னோக்கத்திற்கு பயன்படுத்தியதாக ஆவோம். இதன் மூலம் முஸ்லிம்களை இஸ்லாத்தின் கொள்கைகள், நபி(ஸல்...)அவர்களின் சுன்னத் மற்றும் வாழ்க்கையோடு மக்களை நெருங்கச் செய்ய இயலும்.

ஆஷூரா நாளை நபிகளார் கொண்டாடியது எவ்வாறு? நோன்பு மட்டுமே நோற்றார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்தபொழுது அங்குள்ள யூதர்கள் இந்த 10-வது நாளில் நோன்பு வைத்திருப்பதைக் கண்டார்கள். இவ்வாறு நோன்பிருப்பதின் விசேஷம் என்ன என்பதை அறிய நபி(ஸல்...)அவர்கள் யூதர்களை பார்த்து வினவினார்கள். அதற்கு அந்த யூதர்களோ "இன்றைய நாளில்தான் இறைவன் நபி மூஸா(அலை...) அவர்களை பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றி, பிர்அவ்னையும், அவனுடைய கூட்டத்தினரையும் கடலில் மூழ்கடிக்கச் செய்தான் என்றும், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நபி மூஸா(அலை...) அன்று நோன்பிருந்தார்கள். எனவே நாங்களும் நோன்பிருக்கிறோம்.என்று விடை பகர்ந்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்...)அவர்கள் நபி மூஸா(அலை...) அவர்களை பின்பற்றுவதில்(முஸ்லிம்களாகிய) நாங்கள் தான் உங்களைவிட தகுதியானவர்கள் என்று கூறி அந்த நாளில் நோன்பு நோற்றார்கள். மேலும் அனைவரையும் நோன்பு நோற்குமாறும் கூறினார்கள். மேலும் இனிவரும் ஆண்டில் நான் உயிரோடிருந்தால் முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்கள் நோன்பு நோற்பேன்" என்றும் நபி(ஸல்..)அவர்கள் அறிவித்தார்கள். (நூற்கள்: புஹாரி,முஸ்லிம்).

ஆயினும் சில சுன்னத்வாதிகள் இத்தினத்தை விருந்துவை போகங்களுடனும், ஷியாக்கள் துக்கமாகவும் கொண்டாடுகிறார்கள். ஆனால் இவையனைத்தும் பித்அத்துகளாகும். இவை முற்றிலும் இஸ்லாத்திற்கு மாற்றமானது.

நபி(ஸல்...)அவர்களின் பிறந்த தினம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலும் ரபியுல் அவ்வல் 9 திங்கள் கிழமை நபிகளார் பிறந்தார்கள் என்பதாகும். ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் 12 திங்கள் கிழமை வஃபாத்தானார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக